சென்னை பிராட்வே பகுதியில் உள்ள நடைபாதைகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவாகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலை நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி மறைந்த டிராபிக் ராமசாமி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி 2016-ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆக்கிரமிப்பாளா்களுக்கு மாற்றிடம் வழங்க அவகாசம் வழங்கியிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வா்நாத் பண்டாரி மற்றும் என்.மாலா அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் தற்போது வரை நடைபாதை அக்கிரமிப்புகள் அகற்றபடவில்லை என கூறி அதற்கான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சி தரப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் திங்கள்கிழமை முதல் ஒரு வாரம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். அந்த 7 நாள்களுக்கான கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா். மேலும், அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.