அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்
தலைமை தீர்மானம் நிறைவேற்ற உறுப்பினர்கள் கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிக்க | ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?
இதையடுத்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் தம்பிதுரை கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஓ. பன்னீர் செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அதிமுக விவகாரம் குறித்து பேச வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக நேற்று தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை, சி.டி.ரவி உள்ளிட்டோர் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | என்ன, ஓ. பன்னீர்செல்வம் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரா ?