ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் அவரது மனைவியும் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வியாழக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்து, பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் ராமநாதபுரம் வருகை தந்து அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர் அங்கிருந்து வாகனத்தில் ராமேசுவரம் வருகை தந்தார். பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இரவு தாங்கினார்.
சனிக்கிழமை காலையில் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிகலிங்கம் பூஜையில் தரிசனம் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவியும் வருகை தந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தனுஷ்கோடி சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் மறைந்த முன்னாள் குடியரவுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார். கலாம் தேசிய நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழக ஆளுநர் வருகையை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.