அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவரது ஆதரவாளரும் அதிமுக நிர்வாகியுமான கோவை செல்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம்தான் இருக்கிறார்கள். ஓபிஎஸ்-இன் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு நடத்துவது என்பது கனவாகத் தான் இருக்கும்.
பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஓபிஎஸ் எந்த புகாரும் தரவில்லை. ஓபிஎஸ் தில்லி சென்றது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்கத்தான். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நாட்டாவின் வேண்டுகோளை ஏற்று, குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிப்பதற்காக தில்லி சென்று வேட்புமனுத் தாக்கல் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
இன்று பிற்பகல் அவர் சென்னை வருகிறார். வந்தபிறகு அவர் துணிந்து சில முடிவுகளை எடுப்பார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்' என்றார்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்திய நிலையில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?