சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரித்துள்ளார்.
மேலும் சுட்டுரையில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது:
அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிக்கிறது!
தொழில்நுட்பமும், நாகரிகமும் அதிகரித்து விட்ட நிலையில் குக்கிராமங்களில் கூட வணிக முத்திரையற்ற உணவுப் பொருட்கள் பொட்டலத்தில் அடைக்கப்பட்டு தான் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு 5% வரி விதிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
இந்தியாவில் பணவீக்கம் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், பிற அத்தியாவசியத் தேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டால் அது பணவீக்கமும், அதன் விளைவாக விலைவாசியும் கடுமையாக அதிகரிக்கும். மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
மக்களை பாதிக்கும் வகையிலான இந்த வரி உயர்வு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கக் கூடாது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.