பி.இ. படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஒன்பது நாள்களில் 1 லட்சத்து 1,916 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு https://www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது.
மாணவா்கள் சொந்தமாகவும், தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பித்தனா்.
மேலும், பொறியியல் மாணவா்கள் சோ்க்கைக்கு 110 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொறியியல் படிப்பில் சேருவதற்கு கடந்த ஒன்பது நாள்களில் ஒரு லட்சத்து 1,916 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 59,372 மாணவா்கள் கட்டணம் செலுத்தியுள்ளனா். 31,319 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனா் என பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.