கடலூர்: உரத்தட்டுப்பாடு என்று எந்த விவசாயி கூறினான்? என்று ஒருமையில் பேசிய வேளாண் அமைச்சரின் பேச்சால் அங்கு பரபரப்பு நிலவியது.
கடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை காலை குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து உயர்தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடலூர் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், விவசாயிகள் வெளிமாவட்டங்களில் இருந்து உரம் வாங்கி வருவதாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதனால் கோபமடைந்த அமைச்சர், செய்தியாளரிடம் நீ உரம் வாங்கினாயா? என்று கேட்டார். இதற்கு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இந்த புகார் தெரிவிக்கப்பட்டதாக செய்தியாளர் கூறியதற்கு, எந்த விவசாயி சொன்னான் நீ சொல்லுயா என்று ஒருமையில் கூறிவிட்டு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.