மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சென்னை முகப்பேர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றுபவர் ஸ்ரீதர். இவர் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், தன் வகுப்பு மாணவிகளின் தொலைபேசி எண்களை சேமித்துவைத்து அவர்களிடம் பேசி வந்துள்ளார். அப்போது மாணவிகளுக்கு ஆபாசமாக செய்திகளை அனுப்பியும் அவர்களை வெளியே வந்து சந்திக்கச் சொல்லி பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சில மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே, இரண்டு மாணவிகளின் வாட்ஸ்ஆப் உரையாடல்களை வைத்து மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் கடந்த இரு தினங்களாக இதுகுறித்து விசாரணை நடத்தி புகார் உறுதியான நிலையில், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி மற்றும் பள்ளியின் சார்பில் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர், ஆசிரியர் ஸ்ரீதரை போக்ஸோ சட்டத்தின் கீழ் இன்று கைது செய்தனர். மேலும் காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் மாணவிகளிடம் பேசிய உரையாடல்களும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.