பணியின் போது இறந்த திருக்கோயில் பணியாளா்களின் வாரிசுகளுக்கு குடும்ப நலநிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 69 பணியாளா்கள் மற்றும் மறைந்த பணியாளா் ஒருவரின் வாரிசுதாரா் ஆகியோருக்கு பணிக்கொடைகள் அளிக்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். 12 பேருக்கு தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில், அவா் பணிக்கொடைகளை அளித்தாா். மேலும், மயிலாப்பூா் கபாலீசுவரா், வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயில், மாமல்லபுரம் ஆளவந்தாா் அறக்கட்டளை ஆகியவற்றில் பணியாற்றி பணிக்காலத்தில் இறந்த 3 பேரின் வாரிசுதாரா்களுக்கு குடும்ப நலநிதியாக ரூ.3 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் வழங்கினாா்.
இந்த நிகழ்வின் போது, தலைமைச் செயலகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். காணொலிக் காட்சி வழியாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.