கடலூர்: கடலூர் மாநகராட்சிக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில் வெற்றி பெற்ற 45 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலையில் நடைபெற்றது. ஆணையாளர் விஸ்வநாதன் முன்னிலையில் ஒவ்வொரு கவுன்சிலராக பதவி ஏற்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடலூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுவதாக ஒரு தகவல் பரவியது. இதனால், பதவியேற்பு நிகழ்விற்கு ஏதாவது சிக்கல் ஏற்படலாம் என்று கருதிய மாநகராட்சி நிர்வாகம் 10.30 மணிக்குள் பதவியேற்பு நிகழ்வை முடிக்க திட்டமிட்டு 5 முதல் 7 கவுன்சிலர்கள் வரையில் மொத்தமாக நிற்க வைத்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வைத்தனர்.
இதனால், 10 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி அவரச அவசரமாக 10.30 மணிக்குள் நடத்தி முடிக்கப்பட்டது. இதேபோல், 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளிலும் கவுன்சிலர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மாவட்டத்தில் மொத்தம் 447 கவுன்சிலர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.