உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய புதுச்சேரி மாணவி ரோஜா சிவமணியை, மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சால்வை அணிவித்து வரவேற்று நலம் விசாரித்தார்.
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் உக்ரைன் நாட்டில் தங்கி மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வருகின்றனர்.
தற்போது அங்கு நடந்து வரும் போர் சூழலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மாணவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து உக்ரைனில் தங்கி படித்து வரும் 23 மாணவ, மாணவிகளையும் பத்திரமாக மீட்க வேண்டுமென்று அந்த மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை தொடர்பு கொண்டு வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களில், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவி ரோஜா சிவமணி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நள்ளிரவு 12 மணிக்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வரவேற்று நலம் விசாரித்தார்.
தொடர்ந்து பிற மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
இதையும் படிக்க | அமெரிக்க வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்கத் தடை: ஜோ பைடன்