வெள்ளலூரில் தேர்தல் ஒத்திவைப்புக்கு திமுகவினரே காரணம்: எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு

திமுகவினரே வந்து வெள்ளலூரில் பிரச்சனை செய்து தேர்தலை தள்ளி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். 
வெள்ளலூரில் தேர்தல் ஒத்திவைப்புக்கு திமுகவினரே காரணம்: எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு

கோவை: திமுகவினரே வந்து வெள்ளலூரில் பிரச்சனை செய்து தேர்தலை தள்ளி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.  

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ. எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜூனன், தாமோதரன் மற்றும் வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் கார்த்திகேயன், தமிழரசி, கருணாகரன், சந்திரகுமார், கணேசன், உமா மகேஸ்வரி, பார்வதி, மருதாசலம் ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் சமீரனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 

அதிமுக கவுன்சிலர்கள் நாங்கள் 8 பேரும் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெள்ளலூர் பேரூராட்சியில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். மேலும், கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற வார்டு உறுப்பினர் பதவிப்பிரமாணத்தில் எங்களைத் தடுக்க திமுக உறுப்பினர்களும் அவர்களைச் சேர்ந்த வெளியூர் நபர்களும் எங்களை அவர்களது கட்சியில் சேர வேண்டி தினமும் மிரட்டி வந்தனர்.

இந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்போது திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் சில பேர் தலைவர் தேர்தலை நடக்கவிடாமல் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்த அதிமுகவினரை தாக்கியும் அங்கிருந்த நாற்காலி மற்றும் பல பொருள்களை உடைத்து சேதப்படுத்தினார்கள்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி மற்றும் அங்கிருந்த போலீசாரிடம் முறையிட்டபோது அவர்களும்  திமுக நபர்களுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் எங்களையும் மிரட்டி வந்தனர். இச்செயலானது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது.  தலைவர் தேர்தலில் சுமூகமான முறையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளாதவாறு நல்ல முறையில் தலைவர் தேர்தலை நடத்திட வேண்டும், எங்கள் உடமைக்கும் ஒரு உயிருக்கும் பாதுகாப்பு தர வேண்டும்.தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எம்.எல்.ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததில்ல் இருந்து திமுக பல வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள், சிலருக்கு கத்திக்குத்தும் விழுந்தது. தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு முறைகேடு நடத்தினர்.  அமைதியான கோவை மாவட்டத்தில் வன்முறையால் முறைகேடான வெற்றி பெற்றனர். 

ஓட்டு இயந்திரம் மூலமும், கள்ள ஓட்டுகள் மூலமும், மாலை 5-6 மணி வரையும் என முறைகேடு செய்து வெற்றி பெற்றனர். இதை மீறி வெள்ளலூரில் அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றனர்.

இன்று மறைமுகத் தேர்தலுக்கு சென்ற உறுப்பினர்களின் கார்களை வெளி மாவட்டகாரர்கள் வந்து கத்தி, கம்புடன் வந்து தாக்கினர்.

மேலும், உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கோவையில் எந்த காலத்திலும் இப்படி நடந்ததில்லை. தொடர்ந்து புதுமையாக, வன்முறையாக உள்ளது. முறைகேடு மீறி அதிமுக வெற்றி பெற்றகோரம் திமுகவுக்கு  உள்ளது.

திமுகவினரே வந்து வெள்ளலூரில் பிரச்சனை செய்தனர். இப்போது காரணம் இல்லாமல் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.

தேர்தல் தொடர்பாக நீதிமன்றமே அதிமுக கவுன்சிலர்களுகக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை. 

இதனிடையே நாங்கள் திமுகவினரை அடித்ததாக போத்தனூர் போலீசில் இன்று புகார் அளித்துள்ளனர். இது ஜனநாயகப் படுகொலை. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். கூடுதல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை வைத்து தேர்தல் நடத்துவதாக கூரியுள்ளனர். முறையாக தேர்தலை நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com