புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி செந்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் புதுக்கோட்டை நகர்மன்றக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ள திமுக சார்பில் 25ஆவது வார்டில் வெற்றி பெற்ற உறுப்பினர் திலகவதி செந்தில் தனது வேட்புமனுவை நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் தாக்கல் செய்தார்.
அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து திலகவதி செந்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் நாகராஜன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரை தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.
அப்போது புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, நகர திமுக செயலர் க. நைனா முகமது மற்றும் திமுக உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திலகவதி (46), வடக்கு மாவட்ட திமுக பொருளாளரான செந்திலின் மனைவி ஆவார். இவர் பிகாம் பட்டதாரி. இரு மகன்கள் உள்ளனர்.