திருமங்கலம் நகராட்சியில் தலைவர் தேர்தலில் பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்ததால் மறுதேதி குறிப்பிடாமல் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக 18 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், தேமுதிக இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
இதில் தேமுதிக வேட்பாளர் சின்னசாமி திமுகவில் இணைந்ததால் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நகர்மன்றத் தலைவருக்கான திமுக தலைவர் வேட்பாளராக ரம்யா முத்துக்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார்.
அதே நேரத்தில் திருமங்கலம் நகரச் செயலாளர் முருகன் தனது மருமகள் ஷர்மிளாவின் தலைமையை எதிர்த்து தலைவர் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்து இருந்தார். மேலும், தனது ஆதரவாளர்களான 12- உறுப்பினர்களுடன் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தார். தேமுதிக உறுப்பினர் ராஜகுரு என்பவரும் சேர்த்து மொத்தம் 13 பேர் தலைவர் தேர்தலுக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் ரம்யா முத்துக்குமார் தரப்பினர் மற்றும் அதிமுக வார்டு உறுப்பினர்கள் என 14 பேர் இந்த தேர்தலைப் புறக்கணித்தனர்.
இதையடுத்து போதிய உறுப்பினர்கள்(கோரம் இல்லாததால்) இல்லாததால் தலைவர் தேர்தல் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனை நகராட்சி ஆணையர் டெரன்ஸ் லியோன் அறிவித்தார். மதியம் 2.30 மணிக்கு துணைத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.