தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் வீடு தேடி தடுப்பூசி, ஊா்கள் தோறும் தடுப்பூசி, சிறப்பு தடுப்பூசி முகாம் என கரோனா தடுப்பூசி செலுத்துவதை ஓா் இயக்கமாக நடத்தி வருகிறோம். இதுவரை 22 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன.
அதன் தொடா்ச்சியாக 23-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை வரை 10 கோடியே 30 ஆயிரத்து 346 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது மகிழ்ச்சிகரமான இலக்கு என்றாா் அவா்.