உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அந்நாட்டிற்கு படிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதியிலேயே இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு இன்று எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
“உக்ரைனிலிருந்து இதுவரை தமிழகத்தை சேர்ந்த 1,200 மருத்துவ மாணவர்கள் திரும்பியுள்ளனர். வரும் நாள்களில் மேலும் சில மாணவர்கள் திரும்பவுள்ளனர். தற்போதைய சூழல் அவர்களின் படிப்பை சீர்குலைத்ததுடன் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உக்ரைன் அதிபருடன் மோடி பேச்சு: 35 நிமிட உரையாடலில் பேசியது என்ன?
தற்போதைய சூழலில் மீண்டும் உக்ரைனில் படிப்பை தொடர்வது சாத்தியமற்றது. ஆகையால், நாடு திரும்பும் மாணவர்களின் படிப்பை இந்தியாவிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களின் படிப்பு விவகாரத்தில் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.”