2022 - 23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நடப்பாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றும், சட்டப்பேரவையில் நடைபெறும் பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
2022 - 23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வது தொடர்பாக கடந்த மாதம் 21ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பட்ஜெட் தொடர்பாக வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.