தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட கோயில்களின் மாவட்ட வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்து அறநிலைத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி, கோயில்களில் மாவட்டக் கையேடுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன் அசல் பிரதியை இணை ஆணையர்கள் சேகரித்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தலவரலாறுகள் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட வாரியாக அந்தந்த பகுதியின் சிறப்பு வாய்ந்த மற்றும் பாடல்பெற்ற தலங்களைத் தொகுத்து ஆன்மீகத் தலங்களுக்குப் பயணிப்பவர்களுக்கு வசதியாக "திருக்கோயில்களின் வழிகாட்டி" எனும் பெயரில் மாவட்டக் கையேடுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மாவட்ட கையேட்டில் கோயிலின் சுருக்க வரலாறு, அமைவிட வரைப்படம், தொடர்பு முகவரி, திருக்கோயிலின் சிறப்பு மற்றும் தரிசிக்க வேண்டிய படங்களுடன் கூடிய தகவல்களுடன், அருகில் உள்ள சிறப்பு தலங்களின் குறிப்புகளும் வெளியிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒரே அளவில் பல்வண்ண தரத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அசல்பிரதியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தலத்தின் வரலாற்று சிறப்பை பக்தர்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் விரைவு குறியீடுகளும் வெளியிடப்படும்.
இதனால் இந்தியா மற்றும் மற்ற வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பார்த்து பயனடையும் வகையில் இத்தகைய கையேடுகள் தயார் செய்ய மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ள. விரைவில் பணிகள் முடிந்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.