மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வியாழக்கிழமை காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் வீதிகள் புகை மண்டலமாக காட்சி அளித்தன. வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்களை இயக்குவதற்கு மிகவும் அவதிக்குள்ளாகினர்.
மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலைப் பொழுதில் லேசான குளிர் நிலவினாலும் பகல் நேரத்தில் மிதமான வெயில் காணப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வீதிகள் முழுவதும் புகை மண்டலங்களாக காட்சியளித்தன. வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் தங்களது வாகனங்களை முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சாலையின் ஓரமாக நிறுத்தினர்.
அதிகாலையில் வாசல் தெளித்து கோலமிட வந்த பெண்கள் வீதிகள் புகை மண்டலமாக இருப்பதை பார்த்து மீண்டும் வீடுகளுக்குள் சென்றுவிட்டனர்.
மானாமதுரை வைகை ஆற்றுக்குள் அதிகமாக காணப்பட்ட பனிப்பொழிவால் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காணப்பட்டது.
விடிந்து கதிரவன் கண் திறந்ததும் பனிப்பொழிவு மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை விடிந்தவுடன் வாகன ஓட்டிகள் ஓட்டிச் சென்றனர்.