உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போரை அடுத்து, அங்கு சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசும் முழு நடவடிக்கை எடுத்து 1,800 பேரை மீட்டுள்ளது.
தமிழக மாணவர்களை மீட்க, தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி ஆகியோர் அடங்கிய சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு அவர்கள் நேரடியாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று மாணவர்களை மீட்க வழிவகை செய்தனர்.
இன்று தமிழகம் வந்த இறுதி மாணவர்கள் குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அவர்களை நலம் விசாரித்து பயணம் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | உக்ரைனை ரஷியா தாக்குவதன் உள்(ள)நோக்கம் என்ன? அலசல் ரிப்போர்ட்!