திருப்பூர்: திருப்பூர் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான 1.55 ஏக்கர் கோயில் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் சர்கார் பெரியபாளையத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை உள்ளூர்வாசிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலத்தை மீட்க திருப்பூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த நிலத்தை மீட்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.55 ஏக்கர் புன்செய் நிலத்தை அறநிலையத்துறை துணை ஆணையர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் மீட்டனர். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2 கோடியாகும். மேலும், அந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்ற பதாகையும் வைக்கப்பட்டது.
இதையும் படிக்க.. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்தி
இந்த ஆக்கிரமிப்பு மீட்கும் பணியில் கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியர், கோயில் செயல் அலுவலர்கள், வருவாய்த்துறையின், காவல் துறையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.