சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, மகன் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாய் எஸ்தர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்தி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த மருத்துவர் மாணவர் நாவரசு, கடந்த 1996ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பி.கே. பொன்னுசாமியின் மகனான அவரைக் கொலை செய்ததாக மற்றொரு மருத்துவ மாணவரான ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார்.
ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து 1998-ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் மேல்முறையீடு செய்தபோது சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. விடுதலை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், கடலூர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஜான்டேவிட் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.