திருச்சி: ஹிஜாப் விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணாக கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு முரணானது. முற்றிலும் வெறுப்பு மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட தீர்ப்பு. அடுத்த ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் வர இருப்பதால் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப பா.ஜ.க இதுபோன்ற செயல்பாடுகளில் இறங்கி உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. விகிதாச்சார அடிப்படையில் 5 மாநில தேர்தல்களிலும் பா.ஜ.க விற்கு எதிரான வாக்குகளே அதிகம் விழுந்துள்ளன. பாஜக-வை கொள்கை ரீதியாக எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியைப் போன்று, இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைய வேண்டும் என்றார் அவர்.