வேலூர்: வேலூர் மத்திய சிறையிலுள்ள முருகன் தன்னை பரோலில் விடுவிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ள அவர், காட்பாடி பிரம்மபுரத்திலுள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார். இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தார். தற்போது அவரை உச்சநீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.
இதனிடையே, முருகன் தனக்கும் பரோல் வழங்கக்கோரி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். எனினும் அவருக்கு பரோல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த முருகன் வேலூர் மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை காலை உணவு சாப்பிட மறுத்துவிட்டதுடன், பரோல் வழங்கப்படும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தியும், அவர் உணவு சாப்பிட மறுத்துவிட்டதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது: சிறையிலுள்ள முருகன் செவ்வாய்க்கிழமை காலை உணவு சாப்பிடவில்லை. எனினும், அவர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முறைப்படி மனு எதுவும் அளிக்கவில்லை என்றனர்.