மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை ஆட்டுக்கிடா முட்டு சண்டைப் போட்டி நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் கிராமத்தில் திமுகவினர் நடத்திய இந்த ஆட்டுக் கிடா முட்டு சண்டைப் போட்டியில் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த சண்டைக்கான வளர்ப்பு ஆட்டுக் கிடாக்கள் பங்கேற்று மோதின.
போட்டியில் வென்ற ஆட்டுக் கிடாக்களின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு வென்ற ஆட்டுக் கிடாக்களின் கழுத்தில் வேஷ்டி, துண்டுகள் அணிவிக்கப்பட்டது.
மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி பரிசளிப்பு விழாவில் பங்கேற்று ஆட்டுக் கிடாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார். திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.