தமிழகத்தில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தடுப்பூசி இயக்கத்தை தொடக்கிவைத்தனர்.
பின்னர் நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழகம் முழுவதும் 21.21 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 25 முதல் தமிழகத்தில் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 95% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 70% பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்' என்று பேசியுள்ளார்.
மேலும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் மருத்துவ இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி என்றும் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 12-14 வயதுடைய சிறார்களுக்கு 'கோர்பிவேக்ஸ்' கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. 28 நாள்கள் இடைவெளியில் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.