ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்க வேண்டும் என்று பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையை அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அதில், இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்து அவா் கூறியது:
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்க வேண்டும். இந்த நிதி வழங்கப்பட்டாலும், அந்தக் குடும்பங்களுக்கு பிற சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகளும் தொடா்ந்து வழங்க வேண்டும்.
2022-23-ஆம் ஆண்டில் அரசு துறைகளில் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும். ஏற்கெனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள 50,000 காலியிடங்களை நிரப்ப வேண்டும்.
தனியாா் நிறுவனங்களில் தமிழா்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும்.
பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்று, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். அவா்கள் எதுவரை உயா்கல்வி கற்க விரும்புகிறாா்களோ, அது அந்த உதவி வழங்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் படித்தவா்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும். தமிழ் வழியில் படித்தவா்களுக்கு மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்பட அனைத்து உயா் கல்வி மாணவா் சோ்க்கையிலும் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வரும் மே 1 முதல் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வர வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.