
கோப்புப் படம்.
கோடைக் காலத்தில் பாரம்பரிய உள்நாட்டு பானங்களை மக்கள் பருக வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தற்போது, தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. சராசரியாக பகல் வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியஸ் முதல் 40 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் இந்த நேரத்தில் உடல் நலத்துக்கு ஏற்ற பானங்களை பருக வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் இளநீர், நீரா, உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இளநீரில் சர்க்கரைச்சத்து, தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இளநீர், குடல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான உபாதைகளினால் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள், வயதானோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த பானம். இளநீரை அருந்துவதால், நமது உடல் குளிர்ச்சி அடைகிறது. மேலும், தென்னை மரத்தில் உள்ள மஞ்சரியிலிருந்து கிடைக்கும் நீரா பானம் மிகவும் ஆரோக்கியமான பானம். நீரா பானத்தில் கிளைசிமிக் இன்டெக்ஸ் அளவு மிகவும் குறைவாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பானம் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே, தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் நீரா பானத்தினை உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிக்க- அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்: இசையமைக்கும் அனிருத்: அதிகாரப்பூர்வ தகவல்
நொதிப்பதற்கு முன் கொள்கலன்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நீரா பானம் தற்போது நகர்ப்புறங்களில் உள்ள விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது.
அதேபோன்று, நமது மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள, அனைத்து விதமான இயற்கை சூழலிலும் வளரும் தன்மை கொண்ட பனை மரங்களிலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர் போன்ற விளைபொருட்களிலும், மனித ஆரோக்கியத்திற்கு தேவையான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் வைட்டமின்கள், புரதம் உள்ளிட்ட அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இத்தகைய ஆரோக்கியம் நிறைந்த நுங்கு, தமிழகத்தில் மார்ச் முதல் சூன் முடிய கோடைக் காலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியவை.
தற்போது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய இளநீர், நுங்கு, பதநீர் போன்ற பானங்கள் கிராமங்களிலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் ஒரு சில நகர்ப்புறங்களிலும் விற்பனையாகிறது. அதிக விளம்பரம் இல்லாமல், உற்பத்தி செய்யப்படும் இத்தகைய பானங்களின் விற்பனை விலை குறைவாகவே உள்ளது என்பதால், ஊட்டச்சத்து மிகுந்த இவ்விளைப் பொருட்களின் முக்கியத்துவத்தை நாம் அதிகம் உணர்வதில்லை. சென்ற ஆண்டில், தமிழக சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் அரசு, பனை மர மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தந்து, பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து, தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கும், பனையிலிருந்து கிடைக்கும் பொருட்களின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் அரசு சீரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே, தென்னையிலிருந்து கிடைக்கும் இளநீர், நீரா மற்றும் பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உள்ளூர் பானங்களை, கோடைக் காலத்தில் பொதுமக்கள் எவ்விதத் தயக்கமுமின்றி பருக வேண்டும் என்பதுடன், தமது குழந்தைகளுக்கும் இதன் நன்மைகள் குறித்து விளக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள், அரசு விழாக்கள்,அலுவலகக் கூட்டங்களில் இப்பானங்களை விநியோகிக்க அதிக முக்கியத்துவம் தர வேண்டும். கோடைக் காலத்தில் இதுபோன்ற உள்ளூர் பானங்களை பருகுவதால், நமது உடல் நலம் பேணப்படுவதுடன், தமிழ்நாட்டில் உள்ள தென்னை, பனை விவசாயிகளின் வருமானமும் உயரும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.