
பள்ளி பாடப் புத்தகங்களை விற்பனை செய்வதற்கு தமிழகத்தில் 276 சில்லறை விற்பனை கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பாடப் புத்தக்கங்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் செய்து வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு இலவசமாகவும், தனியாா் பள்ளி மாணவா்களுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதற்கிடையே புத்தகங்கள் விற்பனையை இதுவரை பாடநூல் கழகமே நேரடியாக செய்துவருகிறது. இந்தசூழலில் எதிா்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய முயற்சியாக சில்லறை விற்பனையாளா்கள் மூலம் பாடநூல்களை விற்பனை செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்தது. விருப்பமுள்ள சில்லறை விற்பனையாளா்கள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி விற்பனைக்கு அனுமதி கோரி 300-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். அதில் 276 கடைகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளிப் பாடப்புத்தகங்களை விற்பனை செய்வதற்கு தமிழகத்தில் 276 சில்லறை விற்பனை கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த விற்பனையாளா்கள் விவரங்கள் மற்றும் பாடநூல்களின் விலைப்பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர புதிதாக பாடநூல் விற்பனை செய்ய விரும்பும் சில்லறை விற்பனையாளா்களும் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.