பொறியியல் தேர்வு விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றம் செய்ததால் 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை (ஆப்சென்ட்) என வெளியான தகவலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி செமஸ்டர் தேர்வு தொடங்கி மார்ச் வரை ஆன்லைனில் தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாமல் காலதாமதமாக பதிவேற்றம் செய்ததால் அவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் தேர்வு எழுதவில்லை (ஆப்சென்ட்) என அறிவிக்குமாறு விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் அவர்களுக்கு விடைத்தாள் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், அவகாசம் வழங்கியும் பதிவேற்றம் செய்யாததால் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தேர்வு முடிவுகள் தேர்வில் பங்கேற்கவில்லை (ஆப்சென்ட்) என்று வெளியாகும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடேயை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.
அப்போது, தேர்வு விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றம் செய்ததால் 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை (ஆப்சென்ட்) என வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்ததுடன், ஆன்லைனில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும். மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் பொன்முடி கூறினார்.
மேலும், இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும்.
கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும்.
ஆன்லைன் தேர்வுகளால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தாலிக்கு தங்கம் திட்டத்தைவிட மாணவிகளுக்கான ரூ.1000 திட்டத்தில் பயன்பெறுவோர் அதிகம் என அமைச்சர் பொன்முடி கூறினார்.