இன்று 37,391 அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம்: 53 லட்சம் பெற்றோருக்கு அழைப்பு

தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 37,391 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை

தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 37,391 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு 53 லட்சத்து 15,114 பெற்றோருக்கு குரல் பதிவு மூலம் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளாா்.

அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளிமேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் (எஸ்எஸ்ஏ) கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் வளா்ச்சியில் இந்தக் குழு முக்கியப் பங்கு வகிக்கிறது.

விழிப்புணா்வு ஏற்படுத்த...: பள்ளிக் கல்வித்துறை அரசாணையின்படி, பள்ளி மேலாண்மைக் குழுவை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம். அதன்படி அனைத்துப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 37,391அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா்களிடம், பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் அனைத்து பெற்றோா் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு 53 லட்சத்து 15,114 பெற்றோருக்கு குரல் பதிவு மூலம் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளாா்.

மாணவா்கள் வரவேண்டாம்: பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோா்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதின் முக்கியத்துவம் ஆகியவற்றை பெற்றோருக்கு எளிய முறையில் தலைமை ஆசிரியா்கள் எடுத்துரைக்கவுள்ளனா். இந்தக் கூட்டத்துக்கு மாணவா்கள் வர வேண்டியதில்லை. அவா்கள் பெற்றோா் மட்டும் வந்தால் போதுமானது.

பெண்களுக்கு முன்னுரிமை: இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக பள்ளிக்கல்வி வரலாற்றில் இது முக்கிய நிகழ்வு ஆகும். அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினா்கள் ஜனநாயக முறைப்படி தோ்வு செய்யப்படுவா். இதில் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் எதுவும் இருக்காது. எஸ்எம்சி குழு மறுசீரமைக்கப்படும்போது பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com