காரைக்கால் : விநாயகர் கோயில் முன்பு கட்டப்பட்ட முகப்பு மண்டபத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்து அமைப்புகள் அழைப்பின்படி காரைக்காலில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
காரைக்கால் நகரப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை சார்புடைய ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் முகப்பில் கான்கிரீட் மண்டபம் கட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், சில எதிர்ப்புகளால் கட்டுமானம் முடங்கியது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுமானம் திருப்பணிக் குழுவினரால் தொடங்கப்பட்டு, அண்மையில் தளம் அமைத்து, சுதை வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அரசுத் துறைகளின் அனுமதியின்றி சாலையின் குறுக்கே கட்டுமானம் நடைபெறுவதாகக்கூறி, இதனை இடிக்க உத்தரவிடுமாறு சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 2 நாள்களுக்கு முன்பு கட்டுமானத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இச்சூழலில் காரைக்காலில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்று, தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதன்கிழமை ஒரு நாள் அடையாள கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.
இதன்படி காரைக்கால் நகரப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வாகனப் போக்குவரத்து உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்குகின்றன. கடையடைப்புப் போராட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.