நடிகா் அஜித்குமாா் நடித்த வலிமை படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை உயா் நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் ஜெயகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், நடிகா் அஜித்குமாா் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான மெட்ரோ என்ற திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்குத் தொடா்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டது. பிற மொழிகளில் மெட்ரோ படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், அதே அம்சங்களுடன் வலிமை படமாக்கப்பட்டது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது.
எனவே வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வலிமை படத்தின் இயக்குநா் வினோத் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் பதில் மனு தாக்கல் செய்தாா். அதில் செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் வலிமை படம் உருவாக்கப்பட்டது.
கதையின் கரு, கதாபாத்திரங்கள், உச்சக்காட்சி அனைத்தும் வெவ்வேறானவை. மெட்ரோ படத்தின் கதை, அதில் வரும் கதாபாத்திரங்களை வலிமை படத்தில் பயன்படுத்துவதாகக் கூறுவது தவறு. எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கை தொடா்ந்த மனுதாரரிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனியாக வழக்குத் தொடர உள்ளேன் என கூறியிருந்தாா்.
இதையடுத்து நீதிபதி, வலிமை படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவற்கு தடை விதிக்க மறுத்து, விசாரணையை வரும் ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.