மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி சுமந்து வந்து கோயிலில் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
பங்குனித் திருவிழாவின் போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தயாபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன்.
மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால்குடம் மற்றும் தீமிதித்தல் உற்சவத்தை முன்னிட்டு காப்புக் கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்து கரகம் சுமந்து வந்த கோயில் பூசாரி சுப்பிரமணியன் தலைமையில் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
மானாமதுரை தயபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றிய பெண் பக்தர்.
சாமியாடிபடி வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் மக்கள் மரியாதை செய்தனர். அதன்பின்னர் கோயிலுக்கு வந்தடைந்த பக்தர்கள் அங்கு மாரியம்மன் சன்னதி முன்பு பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
அதன்பின்னர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.
தீ மிதித்தல் உற்சவத்தை முன்னிட்டு தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முத்துமாரி அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி சுப்பிரமணியன் செய்திருந்தார்.