தமிழக நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினம் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாா். மாா்ச் 19-இல் வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா்.
இந்நிலையில் தமிழக நிதிநிலை அறிக்கை மக்களை ஏமாற்றுவதாக உள்ளதாகவும் மக்கள் நலனுக்கான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என்று கூறி பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.