வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருகிற மார்ச் 28, 29 தேதிகளில் நாடு முழுவதும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதில், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நாள்களில் பேருந்து, ஆட்டோக்களை இயக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது, அன்றைய தினம் யாருக்கும் விடுப்பும் கிடையாது, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.