வேலூர் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக் வெடித்து விபத்து ஏற்பட்டதில் தந்தை- மகள் உயிரிழந்தனர்.
வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் துரை வர்மா(49). இவரது மகள் ப்ரீத்தி(13). துரை வர்மா தான் வைத்திருக்கும் எலக்ட்ரிக் பைக்கை இரவில் வெளியில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். நள்ளிரவில் உயர்மின் அழுத்தத்தால் எலக்ட்ரிக் பைக் வெடித்ததாகவும் இதனால் அருகில் இருந்த மற்றொரு வாகனமும் தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வீடு முழுவதும் புகைமூட்டமாக இருக்க, தந்தை- மகளால் வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளே பதுங்கியுள்ளனர். புகை மூட்டம் அதிகரித்த நிலையில் மூச்சுத்திணறி இருவரும் உயிரிழந்தனர்.
காலையில் அக்கம்பக்கத்தினர் தகவலறிந்து, காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்தும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.