அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை: அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி

 சசிகலா மீண்டும் கட்சியில் சேர வாய்ப்பே இல்லை என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி சேலம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி 
எடப்பாடி பழனிசாமி 

சேலம் மாவட்டத்தில் அதிமுக அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 37 ஒன்றியங்கள் மற்றும் 33 பேரூராட்சிகள், 6 நகராட்சிகளுக்காக ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பார்வையிட்டார். 

அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனையடுத்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது, " முதலமைச்சர் துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு அரங்கினை சர்வதேச கண்காட்சியில் தொடங்கி வைக்கவும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றதாக கூறப்பட்டது. 

முதலமைச்சருடன் துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றது சரி. ஆனால், முதலமைச்சரின் துபாய் பயணத்தை குடும்ப சுற்றுலாவாகத்தான் பொதுமக்கள் பார்க்கின்றனர். துபாய் சென்றது தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா, குடும்பத்திற்கு புதிய தொழிலை தொடங்கவா என மக்கள் கேள்வி கேட்கின்றனர். 

குடும்பமே துபாய் பயணம் சென்றது தனிப்பட்ட காரணத்திற்காகத்தான் என மக்கள் பேசிக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய சர்வதேச கண்காட்சி இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டின் சார்பில் அரங்கு தொடங்கியிருப்பது வேடிக்கையாக உள்ளது. 

இதை ஒரு சாக்காக வைத்து துபாய் சென்றுள்ளார். நான் வெளிநாடு சென்றபோது பயணிகள் விமானத்தில்தான் சென்றேன். துறை அமைச்சர்களும், செயலாளர்கள் மட்டுமே உடன் வந்தனர். லண்டனுக்கு சென்றபோது, நம்முடைய ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த ஆய்வு செய்தோம். 

அதிநவீன மருத்துவ கருவிகளை பயன்படுத்துவது குறித்தும் பார்வையிட்டோம். கிங்ஸ் மருத்துவமனையை தமிழ்நாட்டின் மருத்துவமனைகளை மாற்றுவதற்காக ஆலோசனை நடைபெற்றது. அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் செயலாளர் மட்டுமே இருந்தனர்.

அப்போது அமைச்சர்களுடன் சுற்றலா சென்றதாக அவதூறு கூறிய ஸ்டாலின் இப்போது குடும்பத்துடன் சென்றுள்ளார். ஆக்கபூர்வமான திட்டங்களை கொண்டு வர வேண்டியே நாங்கள் சென்றோம். இதனடிப்படையில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா தலைவாசலில் கொண்டு வரப்பட்டது. 

வெளிநாடு பயணத்திற்கு பிறகு மின்சார வாகன கொள்கை உருவாக்கப்பட்டது. மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டினை தொடங்கினர். பல வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் புதிய தொழில்கள் கொண்டு வரப்பட்டன. 

நான் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு மீண்டும் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். ஸ்டிக்கர் ஒட்டுவதே அவரின் வேலை. தற்போதைய சர்வதேச கண்காட்சியில் கூட அதிமுக அரசின் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 10 மாதத்தில் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை. புதிய தொழில்கள் கொண்டு வரப்படவில்லை. 

அதிமுக திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. விருதுநகர் பாலியல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடுவோம். பொள்ளாச்சி சம்பவத்தை கண்டறிய வேண்டும் என்று அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் தான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அவர் மீதே அவதூறு பரப்புகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முதன்மை மாநிலம் என்று சொன்னார். ஆனால், ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. பாலியல் கொடுமைகள் பல மடங்கு அதிகரித்து விட்டது" என்றார்.

திமுக அரசை எதிர்த்து பாஜக மட்டுமே போராட்டம் நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "தற்போது அதிமுகவில் 25 மாவட்டங்களுக்கான அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது. உட்கட்சித் தேர்தல் முடிந்த பிறகு நானும் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி விரைவில் போராட்டம் அறிவிப்போம்" என்றார்.

சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பிருக்கிறதா என கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவின் அனைத்து மாவட்டங்களும், தலைமைக் கழகமும் இணைந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. நானும் ஓபிஎஸ் இணைந்து அறிவித்து விட்டோம். அதெல்லாம் முடிந்து விட்டது. மீண்டும் அதற்கு வாய்ப்பில்லை. யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது" என்றார்.

சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அரசியல் வேறு. தனிப்பட்ட முறையில் பிரச்னை கிடையாது. அதனடிப்படையில் ஓபிஎஸ் பேசியுள்ளார். இப்போது ஸ்டாலினுடன் எங்களுக்கு அரசியல் ரீதியாகவே பிரச்னை உள்ளது. தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.

மேலும் பேசிய அவர், "ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் விசாரணை நடைபெறும்போது, கருத்து சொல்வது குந்தகம் விளைவிக்கும். மூச்சுக்கு 300 தடவை ஜனநாயகத்தை பேசும் திமுக, தற்போது இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசிவிட்டு, இப்போது போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ஒரு திட்டத்தை அறிவித்தால் அதற்கான காலம் தேவைப்படுகிறது. கரோனா காலத்தில் 10 மாத காலம் எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். 97 சதவீதம் பணிகள் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. எப்போதும் ஒரே கருத்துத்தான். எட்டு வழிச்சாலையை எக்ஸ்பிரஸ் வே என பெயர் மாற்றி கொண்டு வர திமுக முயற்சித்து வருகிறது. அத்திட்டம் கைவிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு உள்ளது. காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து கர்நாடகா நடந்து கொள்ள வேண்டும். 

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும். காவிரி நதியை நம்பியே தமிழ்நாட்டு மக்களும் விவசாயிகளும் உள்ளனர். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மேகதாது அணை பிரச்சினையில் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.
 
தமிழகத்தில் கடந்த 10 மாத காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுதான் திமுக அரசின் சாதனை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com