புதுச்சேரியில் மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது.
மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிற்சங்கங்கள் சாா்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நடைபெறுகிறது. இதில், 29-ஆம் தேதி முழு அடைப்பும் நடைபெறுகிறது.
இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகிறது.
தமிழகத்தில் இருந்து வரும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை, விழுப்புரம், கடலூர், திண்டிவனம் பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் மட்டும் இயங்குகின்றன.
இதனால் சென்னை, கடலூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் மார்க்கத்தில் செல்லக்கூடிய மக்கள் பேருந்து நிலையத்தில், காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் அதைப் பயன்படுத்துகின்றனர்.
வங்கிகள், எல்ஐசி அலுவலகம், அஞ்சல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
போராட்டத்தின்போது அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக போலீஸார் பாதுகாப்பு பணியிடல் ஈடுபடுபட்டுள்ளனர்.