பெருங்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பெருங்குடி, உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அமேசான் நிறுவனம் முதன்முதலில் தமிழ்நாட்டில் 50 பணியாளர்களுடன் தொடங்கப்பட்டு, இன்று 14,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. பெருங்குடியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய அலுவலகமானது, 8.23 இலட்சம் சதுர அடி பரப்பளவில், 18 தளங்களுடன், 6000 பணியாளர்கள் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனத்தின் நான்காவது அலுவலகம் ஆகும்.
அமேசான் நிறுவனத்தின் இந்த முதலீடு குறித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர், தமிழ்நாட்டின் சிறப்பான உள்கட்டமைப்பு வளர்ச்சி, முதலீட்டிற்கு உகந்த அரசின் கொள்கைகள், மாநிலத்தில் உள்ள திறமையாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும், அமேசான் நிறுவனம் இந்தியாவின் புதிய அலுவலகத்தை சென்னையில் தொடங்குவது மாநிலப் பொருளாதாரத்தில் பன்மடங்கு நல்விளைவை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விரிவாக்கம் மற்றும் முதலீடு நமது மாநிலத்தின் பொருளாதார, சமூக நல்வாழ்வை இணைக்கும் என்றும், அமேசான் இந்தியா நிறுவனத்திடமிருந்து இந்த வளர்ச்சியை நாங்கள் வரவேற்கிறோம், அவர்களின் புதிய அலுவலகத்தைத் தொடங்குவதற்கு வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.