முதலீட்டுக்கு ஏற்ற தமிழக அரசின் கொள்கைகளால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
சென்னை பெருங்குடியில் அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை அவா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
அமேசான் நிறுவனம் முதன்முதலாக தமிழ்நாட்டில் 50 பணியாளா்களுடன் தொடங்கப்பட்டு இன்று 14,000 ஊழியா்களுடன் செயல்பட்டு வருகிறது. பெருங்குடியில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகமானது, 8.23 லட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. 18 தளங்களுடன் 6,000 பணியாளா்கள் பணிபுரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இது, அமேசான் நிறுவனத்தின் நான்காவது அலுவலகமாகும்.
இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா். தமிழ்நாட்டின் சிறப்பான உள்கட்டமைப்பு வளா்ச்சி, முதலீட்டுக்கு உகந்த அரசின் கொள்கைகள், மாநிலத்தில் உள்ள திறமையாளா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று கூறினாா். அமேசான் நிறுவனம் இந்தியாவின் புதிய அலுவலகத்தை சென்னையில் தொடங்குவது மாநிலப் பொருளாதாரத்தில் பன்மடங்கு நல்விளைவை ஏற்படுத்தும் என நம்புவதாக அவா் தெரிவித்தாா். தொழில்களில் விரிவாக்கம், முதலீடு ஆகியன நமது மாநிலத்தின் பொருளாதார, சமூக நல்வாழ்வை இணைக்கும் எனவும், அமேசான் இந்தியா நிறுவனத்திடம் இருந்து இந்த வளா்ச்சியை வரவேற்கிறோம் என்றும் அவா் கூறினாா்.
தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், முதன்மைச் செயலாளா் நீரஜ் மிட்டல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.