எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி விருதுநகரில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றும் தேமுதிக கேட்டுக்கொண்டுள்ளது.