சங்ககிரி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து, சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கொங்கணாபுரம் பிரிவு சாலை பகுதியில் இரு சக்கர வாகனம், சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவர் சி.எஸ்.ஜெயக்குமார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். அவர், தினசரி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருவதால் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலையேற்றம், லாரி தொழில் பெரு நஷ்டம் ஏற்பட்டு வருவது குறித்து விளக்கிப் பேசினார்.
மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினால் அனைத்துதரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.
கிழக்கு ஒன்றிய வட்டாரத்தலைவர் கே.சரவணன் முன்னிலை வகித்தார்.
சங்ககிரி நகரத்தலைவர் எ.ரவி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலர்கள் நடராஜன், ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகி சின்னுசாமி, நிர்வாகிகள் கருப்பண்ணன், செங்கோட்டுவேல், அங்கமுத்து, லோகநாதன், பக்காளியூர் கந்தசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.