சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நிபந்தனையாக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் ஒரு மாத காலம் பணியாற்றவும், தனது பணி அனுபவம் குறித்து நாள்தோறும் அறிக்கையாக தயார் செய்து மருத்துவமனை முதல்வருக்கு சமர்ப்பிக்கவும், ஒரு மாத கால பணி முடிந்ததும், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய பிரவீன் மேற்கொண்ட பணி குறித்து ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த கடந்த 21ஆம் தேதி பைக் ரேஸில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நிபந்தனை ஜாமீனில், அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவில் ஒரு மாதம் பணியாற்றவம், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை பிரவீன் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.