புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் புதிதாக கரோனா நோயாளிகள் பதிவாகாத நிலையில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவரும் குணமடைந்ததால், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை பூஜ்யமாகியுள்ளது.
இதன் மூலம், புதுச்சேரி கரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது என்று சுகாதாரத் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநர் ஜி.ஸ்ரீராமுலு வெளியிட்ட அறிக்கையில்,
வியாழக்கிழமை காலை 10 மணியுடன் முடியும் 24 மணி நேரத்தில் நான்கு மண்டலங்களிலும் ஒரு புதிய பாதிப்பும் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே கரோனா பாதித்திருந்தவரும் குணமடைந்துவிட்டதால், கரோனா நோயாளிகளே இல்லாத நிலை உருவாகியுளள்து. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு மண்டலங்களிலும் மொத்தம் 212 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் கரோனா பாதிப்பு பூஜ்யமாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இன்றைய நிலவரப்படி, புதுச்சேரி கரோனா இல்லாத பகுதியாக மாறியிருப்பதாகக் கூற முடியும் என்றும் குறிப்பிட்டார்.