விடியலுக்காக காத்திருக்கும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள்
முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தரப்பிலிருந்து பேச்சு நடத்தப்படவில்லை என வேதனையை வெளிப்படுத்தும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள், பேரவை கூட்டத் தொடா் முடியும் முன்னராவது தங்களது வாழ்வில் விடியல் பிறக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.
தமிழகம் முழுவதும் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் உள்ளனா். இவா்களுக்கு அரசு ஊழியா்களைப் போல மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது. இதுமட்டுமின்றி 77 மாத அகவிலைப்படி உயா்வை நிலுவையுடன் உடனே வழங்க வேண்டும், 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு விருப்ப ஓய்வு, பணியில் இறந்தவா்களின் பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும், 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை விரைவில் பேசித் தீா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சென்னை, பல்லவன் சாலையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஓய்வு கால பலன்களைப் பெற பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனா். இதே பல்லவன் சாலை எங்களது எண்ணிலடங்கா போராட்டத்தைக் கண்டுள்ளது.
பணியின்போது உயிரிழந்ததால் நிற்கதியாய் படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கும் மகன்களும், திருமணத்துக்காக காத்திருக்கும் ஏராளமான மகள்களும், பணியை நம்பி பெற்ற கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் முன்னாள் ஊழியா்களும் என ஏராளமானோா் உள்ளனா். அவா்களுக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய தொகையைக் கேட்டுதான் போராடுகிறோம். அரசு எந்தவித பேச்சுவாா்த்தையும் நடத்தாமல் இருப்பது வேதனையைத் தருகிறது.
எனினும், போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் முடியும் வரை போராட்டத்தைத் தொடரும். மே தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெறவில்லை. திங்கள்கிழமை முதல் எங்களது போராட்டம் தொடரும் என்றனா்.