இன்று இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை நெல்லையில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் இரண்டாண்டுகளுக்குப் பின் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதையும் படிக்க.. நாளை தொடங்குகிறது அனல் தகிக்கும் அக்னி நட்சத்திரம்
இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மேலப்பாளையத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொழுகை நடந்தது. மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் நடந்த சிறப்புத் தொழுகையில் தவ்ஹீத் ஜமாத் மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோன்று நெல்லையில் பேட்டை, பாளையங்கோட்டை, மற்றும் மாவட்ட பகுதியில் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை, உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் புத்தாடைகள் அணிந்து தொழுகையில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் ஏழை எளிய மக்களுக்கும் உதவிகள் செய்தனர்.