சங்ககிரி: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சங்ககிரியில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
சங்ககிரி, சங்ககிரி ஆர்.எஸ்., சங்ககிரி மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் திருநாளையொட்டி நோன்பு இருந்து தொழுகை நடத்தி வந்தனர்.
அதனையடுத்து திங்கள்கிழமை பிறை தெரிந்ததையடுத்து அரசு தலைமை காஜி அறிவித்த பின்னர் செவ்வாய்க்கிழமை ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் கூறி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
பின்னர் சங்ககிரி மலையடிவாரம் முஸ்லிம் தெருவிலிருந்து பழைய, புதிய எடப்பாடி சாலைகள், சந்தைபேட்டை வழியாக தக்பீர் ஓதியபடி பால்வாய் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாகச் சென்று சிறப்புத் தொழுகை செய்தனர்.
அரசு காஜி முஹம்மதுஉவைஸ் ரமலான் சிறப்புத் தொழுகையின் சிறப்புகள் குறித்து தமிழில் விளக்கிக் கூறினார்.
இதே போல் சங்ககிரி பயணியர்விடுதி சாலையில் உள்ள மஸ்ஜிதுல் மனார் பள்ளிவாசல், முஸ்லீம் தெருவில் உள்ள மொஹல்லா பள்ளிவாசல், சங்ககிரி கண்ணம்பாளி காடு உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.