தஞ்சாவூர்: சூர்யா நடித்த சிங்கம் - 3 பட பாணியில் கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து, அதற்குள் கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கும்பகோணத்தில் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட கண்டெய்னர் லாரி நேற்று இரவு பெரியகடைவீதிக்கு வந்துள்ளது. இதில் குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க.. நாளை தொடங்குகிறது அனல் தகிக்கும் அக்னி நட்சத்திரம்
இதனை தொடர்ந்து அங்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர் கண்டெய்னர் லாரியை திறந்து சோதனையிட்டதில் முதலில் ஊதுபத்தி உள்ளிட்ட பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் கன்டெய்னர் லாரி உள்ளே ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது. அதனை திறந்து பார்த்ததில், ஒரு டன் எடையிலான குட்கா, பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் இருந்துள்ளன. இதனையடுத்து காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த நால்வர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் என ஆறு நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்காவை கடத்திய கண்டய்னர் லாரி கிழக்கு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கன்டெய்னர் லாரி பெங்களூரிலிருந்து கும்பகோணத்திற்கு குட்கா பொருள்களை எடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் விசாரணை மேற்கொண்டு ஆறு நபர்களையும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் காவல்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.