சேலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக, பழைமையான கட்டடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
சேலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 37.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் மழையின் காரணமாக சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான பழமையான வீட்டின் முன்பகுதியில் இருந்த பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது கட்டடத்தின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்த கட்டடத்தின் காவலாளி சுப்பிரமணி(75), அவருடைய நண்பர் விஸ்வநாதன் (40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (26) ஆகிய 3 பேரும் கட்டட இடிபாடுகளில் சிக்கி லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
இதையடுத்து அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.